"உனக்காக நான் இங்க காத்துகிட்டிருக்கேன். நீ எங்க போயிட்டு வர்ற? ஏன் இவ்ளோ நேரம்? ஏன் உன் தலையெல்லாம் கலைஞ்சிருக்கு?" என்று ஆரம்பித்து வாய்க்கு வந்ததெல்லாம் ஒருவன் கேட்டால் சம்பந்தப் பட்ட பெண் எப்படி உணர்வாள்? அவளுக்கு கோபம் வருமா வராதா? இப்படி சண்டை போடுபவர்களை பார்த்தால் "ஏன் இப்படி சண்டை போடுகிறார்கள்?" என நாம் நினைப்போமா இல்லையா? ஆனால் இப்படி ஒரு சண்டையை நாம் இன்றும் ரசிக்கும் படி ஒரு சிறந்த பாடலாக தந்திருக்கிறார்கள், பாடலாசிரியரும், இசை அமைப்பாளரும், இயக்குனரும். இரு வல்லவர்கள் (1966) படத்தில் இடம் பெற்ற கவிஞர் கண்ணதாசன் எழுதிய திரு. வேதா அவர்கள் இசை அமைத்த நான் மலரோடு தனியாக... என்ற எல்லோருக்கும் பிடித்த பாடல்...
ஆண்:நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
பெண்:நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
ஆண்:நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
ஆண்:நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
பெண்: நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
ஆண்:நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
பெண்:பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
ஆண்:நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
[ஒரு சிறு விளக்கம் சொல்லலாம் என நினைக்கிறேன். திரையில் தோன்றும் நாயகன், நாயகியை மறந்து விடுங்கள். அவர்களை குறித்த நமது முன் முடிவு, விளக்கத்தை ஏற்க விடாமல் செய்யலாம்.
இந்த பாடலில் வரும் பெண் ஏதோ ஒரு வகையில் (பெரும்பாலும் அழகு) ஆணை விட உயர்ந்தவள். இவள் தனக்கு கிடைத்தது அதிர்ஷ்டம் என்பதாக ஆண் கருதுகிறான். அதனால் தான் அவளை இவன் மகராணி என்கிறான். (ஆனால் அவள் எந்த இடத்திலும் அவனை தன அரசனாக சொல்லவில்லை!) இவள் தன்னை விட்டு போய் விடுவாளோ என அவன் அஞ்சுகிறான். இந்த அச்சம், நம்பிக்கை இன்மை சந்தேகமாக வெளிப்படுகிறது. அதனால் தான் மனதில் பட்டதையெல்லாம் அவளிடம் கேட்கிறான்.
அவளும் அவன் அஞ்சுவதற்கு தகுந்தார் போலவே, இவனை சமாதானப் படுத்த அவனுக்கு பிடித்ததாக பேசுகிறாள். (உன் இளமைக்குத் துணை ஆவதற்காக தனியாக வந்தேன்) வண்டு முகத்தில் மோதி அதை தள்ளியதாலேயே தன் தலை கலைந்ததாக கூறுகிறாள்.
எனவே இவர்கள் இருவருக்கும் இடையில் இருந்தது காதலே அல்ல என நான் கருதுகிறேன். (மாற்று கருத்துக்களை வரவேற்கிறேன்)]
இந்த பாடலை வேறொரு விதமாகவும் சிந்திக்கலாம். பெண்ணை மலருக்கு ஒப்பாக கவிதைகள் கூறுகிறதே.. அது நிஜமானால் எப்படி இருக்கும் என்ற கவிஞரின் கற்பனையாகவும் இந்த பாடலை கொள்ளலாம்.
3Idiots திரைப் படத்தில் ஒரு காட்சி. ஒரு கல்லூரி. அதன் முதல்வர், வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்துகையில், ஒரு சமன்பாட்டை கரும் பலகையில் எழுதுவார். எப்படி என்றால், சூத்திரத்தின் ஆரம்பத்தை இடது கையாலும், சமன் குறிக்கு பிறகு வருவதை வலது கையாலும் ஒரே நேரத்தில் எழுதுவார். கவனிக்கும் படியான இந்த நிகழ்ச்சி, அவரது மேதமையை சொல்லுவதற்காக கொஞ்சம் மிகைப் படுத்தி சினிமாத் தனத்தோடு சொல்லப் பட்டதாகவே நான் நினைத்தேன். நிஜத்தில் இது சாத்தியம் என்பதாக நான் கேள்விப் பட்டது கூட இல்லை. கவனகம் நிகழ்ச்சி பார்த்திருக்கிறேன். (கவனகம் / அவதானம் - ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வது. தசாவதானி பத்து வேலைகள் செய்வார். சதாவதானி நூறு வேலைகள் செய்வார்) சிறப்பான முறையில் மனதை பயிற்சி செய்தால் கவனகம் சாத்தியம். ஆனால்.. (மீதி முடிவில்)
... உண்மையிலேயே தமிழை வளர்க்கும் சிலர் இருக்கிறார்கள். அவர்களில் என்னை கவர்ந்தவர், உபய வேதாந்த வேளுக்குடி வரதாச்சாரியார். இவரது புதல்வரான வேளுக்குடி கிருஷ்ணனும் தந்தைக்கு சளைக்காமல் உபன்யாசம் செய்கிறார். ஆண்டாளின் "மாலே மணிவண்ணா" என்ற பாசுரத்தில் வரும் "மாலே" என்ற ஒரு சொல்லுக்கு மட்டும், ஒன்றரை மணி நேரம் வியாக்கியானம் தருவார் வேளுக்குடி.
இவர் தனது முதல் நூலை எழுதிய பொது அவருக்கு வயது 18. அதன் பெயர், 'திவ்ய பிரபந்த வைபவம்'. சென்ற ஆண்டோடு இதை எழுதி நூறு ஆண்டுகள் முடிகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகிய நான்கு மொழிகளில் இந்த "அண்ணா" எழுதிய நூல்களின் எண்ணிக்கை 1207. (மிக அறிய பொக்கிஷமான இந்நூல்களை இப்போது நாம் எங்கே பார்க்க முடியும்?). ஒன்பது வயதிலேயே கம்ப ராமாயணத்தையும், திவ்ய பிரபந்தத்தையும் கரைத்து குடித்தவர் அண்ணா. இவருடைய இன்னொரு சிறப்பு, வலது கை, இடது கை என இரு கை களாலும் எழுதுவார். அதுவும் ஒரே நேரத்தில். வலது கையால் தமிழில் கிருஷ்ண வியாக்கியானம். இடது கையால் சமஸ்கிருதத்தில் ராம சரிதை.
ஒரு மனிதரால் இது சாத்தியமா என யோசித்துப் பாருங்கள். இது ஏதோ கட்டு கதை அல்ல. 25 ஆண்டுகளுக்கு முன்பு கூட நம்மோடு வாழ்ந்தவர். இரண்டு கைகளாலும் இரண்டு வெவ்வேறு பிரதிகளை எழுதக் கூடிய ஒருவர் இது வரை மனித சரிதத்தில் உண்டா? ஜாக்கிசானையும், மடோனாவையும் தெரிந்து வைத்திருக்கும் நமக்கு, நம் கண் முன் வாழ்ந்த இந்த மேதையை எப்படி தெரியாமல் போயிற்று?
ஒரு பத்திரிகை என்றால் அதில் எத்தனை பேர் வேலை செய்வார்கள்? ஆனால், அண்ணா நடத்திய பத்திரிகையில் அவரே ஆசிரியர், அவரே ப்ரூப் ரீடர், அவரே டெஸ்பாட்ச் கிளார்க், அவரே அதன் எல்லா பக்கங்களிலும் எழுதுபவர். 'பத்திரிகை' என்று தவறாக சொல்லி விட்டேன். தவறு. அவர் இப்படி தன்னந்தனியாக நான்கு பத்திரிக்கைகளை 32 ஆண்டுகளாக நடத்தினார். சமஸ்கிருதத்திலும் ஹிந்தியிலும் வைதீக மனோஹரா, தெலுங்கில் ராமானுஜ பத்திரிக்கா, தமிழில் ஸ்ரீ ராமானுஜன்.
தமிழர்களின் மறதி என்ற பொது வியாதியால் மறக்கடிக்கப் பட்ட இந்த 'அண்ணா'வின் முழுப் பெயர், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார்.
[இந்த அண்ணா காலமானது எப்போது என கூகிளில் தேடினேன். ஹாலிவுட் நடிகை எப்போது ஒன்பதாவது திருமணம் செய்து கொண்டார் என்ற விபரம் தேதியோடு கிடைக்கிறது. ஆனால், அண்ணா பற்றிய வாழ்கை குறிப்புகள் கிடைக்கவில்லை. இரண்டு நாட்கள் தேடி, பல்வேறு நண்பர்களிடம் விசாரித்து தெரிந்த விவரம், அண்ணா பிறந்தது 1891. காலமானது 1983.]
- சாரு நிவேதிதா / துக்ளக் 30.03.2011 இதழ்.
...ஒரு சரியான வார்த்தை கிடைக்காமல் திணறிய அனுபவம் பெரும் பாலும் எல்லா எழுத்தாளர்களுக்கும் இருக்கும் [ஒரே ஒரு விஷயம் எழுதும் போதே..]. அப்படி இருக்கும் போது இரண்டு கைகளாலும் இரு வேறு விஷயங்கள், இரண்டு மொழிகளில்...சாத்தியமே இல்லை. சாத்தியப் படுத்தி இருக்கிறார் என்றால் அவர் சாமானியர் இல்லை. அவருக்கு வணக்கங்கள்.