புதன், நவம்பர் 30, 2011

மகிழ்ச்சி...



மாலை வேளை. வானம் நீர் தூவிக் கொண்டிருந்தது. அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு திரும்பிய சுப்பிரமணி உற்சாகமாக காணப்பட்டார். தலை துவட்ட துண்டு கொடுத்து விட்டு காபி போடப் போன மனைவி காயத்ரியிடம் கையோடு வாங்கி வந்திருந்த குலாப் ஜாமூனையும், பூவையும் கொடுத்தார்.

"என்னங்க விசேஷம்? மாசக் கடைசியில இனிப்பெல்லாம் தடபுடலா இருக்கு!" ஆவலுடன் கேட்டாள் காயத்ரி.

"ரொம்ப நாளா வர வேண்டி இருந்த அரியர்ஸ் பணம் இன்னிக்கு வந்துது. அதான்" என்றார்.

"எவ்வளவுங்க!"

"லட்சத்துக்கு நாலாயிரம் கம்மி"

"ஏங்க! தமிழ்நாடு பூரா கிளை வச்சிருக்க அந்த பெரிய நகை கடை நம்ம ஊர்லயும் கடை திறந்திருக்காங்களாம். நல்ல பெரிய கடையாம். மூணு மாடி. தங்கம், வெள்ளி, வைரம் ஒவ்வொன்னும் ஒவ்வொரு மாடியில. நெறைய டிசைன் இருக்காம். செல்வராணி சொன்னாங்க. நானும் என்னோட இந்த சங்கிலிய மாத்தணும்னு எவ்ளோ நாளா நெனச்சிக்கிட்டிருக்கேன். நகை கடைக்கு போகலாமாங்க?" காபியை கொடுத்துக் கொண்டே கேட்டாள் காயத்ரி.

"இந்த சங்கிலிக்கு என்ன, நல்லாத் தானே இருக்கு?"

"இல்லைங்க, இது பத்து வருஷத்துக்கு முன்ன நம்ம கல்யாணத்துக்கு அப்பா அம்மா செஞ்சு போட்டது. இப்போ இத விட அழகா நெறைய டிசைன் வந்துடுச்சி. வைரம் மாதிரியே ஜொலிக்கிற ஜிர்க்கான் கல்லு வச்சு, மரகதம், மாணிக்கம், கெம்பு எல்லாம் வச்சு, ரோடியம் பாலிஷ் போட்டு, பாம்பே கட்டிங், கேரளா மாடல் அப்படின்னு என்னென்னவோ வந்துருக்குங்க. வாங்க போயி பாத்துட்டு வருவோம்" ஆர்வமாக இருந்தாள் காயத்ரி.

நகை கடைக்காரன் ரேஞ்சுக்கு பேசறாளே! என நினைத்துக் கொண்டே, "தங்கம் இப்போ விக்கற வெலையில வாங்கித் தான் ஆகணுமா?" எனக் கேட்டார்.

"என்னை கல்யாணம் பண்ணி கொடுக்கறப்ப, கிராம் நானூறு ரூபாய்க்கு வாங்கினோம். இப்போ பாருங்க ஒரு கிராம் ரெண்டாயிரத்து ஏழு நூறு ரூபாவுக்கு விக்குது. தெனமும் ஏறிகிட்டே தான் இருக்கு. ஆனாலும் மக்கள் வாங்கி கிட்டே தான் இருக்காங்க. இப்போ கிரீஸ், அமெரிக்கா, இத்தாலி இங்கல்லாம் பொருளாதார நெருக்கடி இருக்கறதால தங்கம் இன்னும் விலை ஏற்றத்துக்கு தான் வாய்ப்பிருக்கறதா சொல்றாங்க."

நல்ல தெளிவா இருக்கா. ஒன்னும் பேச முடியாது என நினைத்துக் கொண்டே, "சரி போகலாம். நீ சொன்னா சரியாத் தான் இருக்கும்" என்றார்.

"சமத்து" என கணவன் முதுகில் செல்லமாய் தட்டி விட்டு நகை கடைக்கு கிளம்ப ஆயத்தமானாள். வானம் வெளுத்திருந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் இருவரும் நகை கடையில் இருந்தனர்.

ஊழியர்களின் முக மலர்ச்சியும், ஏசியின் குளிர்ச்சியும் கூடவே மஞ்சள் வெளிச்சத்தில் தங்கம் தக தக வென மின்ன தேவ லோகத்தில் இருப்பதாக உணர்ந்தார் சுப்பிரமணி. "இவ்வளவு தங்கம் இந்தியாவுல இருந்துமா நாம வளரும் நாடு?" என ஆச்சரியப் படுமளவிற்கு தங்கத்தை குவித்து வைத்திருந்தார்கள்.

இரண்டு மணி நேரம், இருக்கும் எல்லா நகைகளையும் பார்த்து விட்டு முடிவாக ஒரு சங்கிலியை காயத்ரி தேர்ந்தெடுக்க, பழைய நகையை கொடுத்து கணக்கு போடும் போது, அதன் தரம் குறைவு என கடைக்காரர் அதன் மதிப்பை குறைக்க, கணக்கு சீட்டை வாங்கி பார்த்தார் சுப்பிரமணி. சீனுவாச ராமனுஜம் வந்தால் கூட கணக்கு புரியுமா என்பது சந்தேகம் தான். விளக்கம் கேட்ட போது எப்படி எப்படியெல்லாமோ விளக்கினார்கள், கடைசி வரை புரியவில்லை. வேறு வழி இல்லாமல் இருந்த பணத்தை கொடுத்து விட்டு, குறைந்த பணத்தை நண்பன் பாலுவை கடைக்கு கொண்டு வந்து தர சொல்லி (கடன் தான்) கொடுத்தார் சுப்பிரமணி.

இரண்டு லட்சத்துக்கு மேல விழுங்கிய அந்த சங்கிலி ஏனோ சுப்பிரமணிக்கு நிறைவை தரவில்லை. "இதுக்கா ரெண்டு லட்சம்!?" என்ற எண்ணமே அவர் மனதில் மேலோங்கி இருந்தது.

வாங்கிய பணத்திற்கு ரசீது கொடுத்தார்கள். நகையை அழகிய பெட்டியில் வைத்துக் கொடுத்தார்கள். கூடவே சாப்பாட்டை சூடாக வைத்திருக்கும் ஹாட் பேக்கை பரிசாக கொடுத்தார்கள். உடனே காயத்ரி உச்சி குளிர்ந்து போனாள். "நாம வழக்கமா வாங்கற கடையில பர்ஸுக்கு மேல எதுவும் தர மாட்டாங்க. ரொம்ப கேட்டா கொஞ்சம் பெரிய பர்ஸா தருவாங்க. ஆனா இங்க நாம கேக்காமயே ஹாட் பெக்கேல்லாம் தராங்க!" சிலாகித்து பேசினாள் காயத்ரி.

நகை கடையிலேயே பார்த்த பாலு, அங்கிருந்து ஹோட்டலுக்கு போன போது அங்கே சந்தித்த இருவர், வேலை செய்யும் இடத்தில் குறைந்தது பத்து பேர், போன் பேசும் போது சிலரிடம் என பார்க்கும் எல்லோரிடத்தும் ஹாட் பேக்கை பற்றியே பேசிக் கொண்டிருந்தாள் காயத்ரி.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

திங்கள், நவம்பர் 28, 2011

கண்ணீர் அஞ்சலி...


லை கலைந்து
கன்னம் ஒட்டி
கண்கள் குழி விழுந்து
புடவை கசங்கிய  
ஒரு பாட்டி இருக்கிறார்
கண்ணீர் அஞ்சலி 
சுவரொட்டியில்.

இருக்கும் போது
சோறு போட்டிருக்கலாம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

திங்கள், நவம்பர் 21, 2011

குயில் தேடல்...

டந்து போன வசந்த காலத்தில் நமது கவனத்தை ஈர்த்த குயிலின் குரல்,

எங்கிருந்தோ கூவும் 
ஒற்றைக் குயில் 
எதிரொலிக்கிறது 
நீ இல்லாத 
என் தனிமையின் 
ஏக்கத்தை.

என என்னை கவிதை எழுத வைத்தது. பேருந்தில் அமர்ந்து கவிதையை மனதில் அசை போட்டுக் கொண்டிருந்த போது, வைரமுத்து "குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா?" என கேள்வியை எழுப்பினார். அட! அதானே, நாம இது வரை குயிலையே பார்த்ததில்லையே? என சுவாரசியம் பற்றி கொள்ள, குயில் தேட ஆரம்பித்தேன். 

கட்டிடக் காட்டில் குயிலை எங்கே போய் தேடுவது? எங்கிருந்து ஆரம்பிப்பது என யோசித்துக் கொண்டிருந்த போது,  "நம்ம கூகுளாரை கேட்டால் என்ன?" என யோசனை மின்னலென தோன்றியது. படங்கள் பிரிவில் அவரை கேட்டால், கௌதாரி, காக்கை, கரிச்சான் குருவி, குயில் பாட்டு பாடிய பாரதி, சின்ன குயில் சித்ரா, லதா மங்கேஷ்கர், பி.சுசீலா, எஸ்.ஜானகி என எதை எதையோ காட்ட, எனக்கு தலை சுற்றத் தொடங்கியது.

நண்பர் வெங்கடேசன் "வண்டலூர் ஜூ ல பார்க்கலாமேடா" என அருமையான ஒரு யோசனை சொன்னார். அதானே என ஒரு ஞாயிற்றுக்கிழமை இருவரும் கேமரா சகிதம் ஆர்வத்துடன் கிளம்பினோம்.

வண்டலூரில், வெள்ளை நிறத்தில் மயில், மரம் ஏறும் கரடி (!), தங்க நிற சேவல் என எத்தனையோ விலங்குகள் இருந்தன. குயிலுக்கு கூண்டு மட்டும் இருந்தது. பெருத்த ஏமாற்றத்தோடு வீடு திரும்பினேன்.

சிதம்பரத்தில் இருக்கும் பறவை ஆய்வாளர் திரு.பாலசுப்ரமணியத்தின் நினைவு வர, அவரிடம் தொலை பேசிக் கேட்ட போது, அவர் சொன்னார். "சொந்தமாக கூடு கட்டத் தெரியாத குயில், காகத்தின் கூட்டில் தனது முட்டைகளை இடும். இது தெரியாமல் குயில் குரலெடுத்து பாடும் வரை தன் குழந்தை என்றே காகம் குயிலை வளர்த்து வரும். குயிலில் ஆண் குயில் கருப்பாக காகம் போன்றும், கண்கள் சிவந்தும், பெண் குயில் கௌதாரி போல வரிகளுடனும் இருக்கும் என்றார். (கூகுளார் சரியாத்தான் காட்டி இருக்கார்)

குயிலை எங்கே பார்க்க முடியும் என்றேன் நான். வசந்த காலத்தின் காலை வேளையில் சென்னை மவுண்ட் ரோடில் கூட குயிலின் குரலை கேட்கலாம். ஆனால் பார்ப்பது கொஞ்சம் சிரமம் தான் என முடித்துக் கொண்டார். (அதனால தான் வைரமுத்து அப்படி கேட்டாரோ?)

அவர் அப்படி சொல்லி விட்டாலும் குயில் தேடல் மனதில் இருந்து அகலவில்லை. ஒருமுறை சென்னைக்கு ரயிலில் பயணம் செய்யும் போது, மதுராந்தகம் அருகே, நண்பர் சொன்ன அடையாளங்களோடு ஆனால் அளவில் கொஞ்சம் பெரியதாக, தட தடக்கும் ரயிலுக்கு அஞ்சாமல் தண்டவாளத்தின் சமீபத்திலேயே நின்றிருந்தது. உடனே ஆர்வ மிகுதியில் அவரை அழைத்து அடையாளம் சொன்னேன். "பக்கத்தில் ஏதாவது நீர்நிலை இருந்ததா?" என கேட்டார். ஆமாம். ஒரு ஓடையின் ஓரமாகத் தான் நின்று கொண்டிருந்தது என்றேன். "அது நீர் காக்காங்க" என சொல்லி எனக்கு ஏமாற்றம் தந்தார்.

தேடி சலித்து கிட்ட தட்ட குயிலை மறந்து போயிருந்த நிலையில் இந்த ஆண்டு வசந்த காலம் வந்ததும், குயில் தனது இனிய குரலால் தன்னை எனக்கு நினைவு "படுத்தியது".

கருப்பாக எந்த பறவையை பார்த்தாலும் இது குயிலாக இருக்குமோ? என யோசிக்கும் அளவிற்கு குயில் என்னை தேட வைத்தது. இந்த சூழலில் நண்பர் சீனுவாசன் தனது வீட்டுக்கு நண்பர்கள் எங்களை - ஒன்று கூடல் - விருந்துக்கு அழைக்க, நாங்கள் சென்று விருந்தை சிறப்பித்தோம். உண்டு முடித்து, பாடிக் களித்து, விளையாடி மகிழ்ந்து வீடு திரும்ப வெளியே வந்த போது, கொஞ்சம் தூரத்தில் முள் புதரில், கருப்பாய் ஒரு பறவை. குயிலா? என விழித்துக் கொண்டிருக்கும் என் மனம் கேட்க, உடனே கையிலிருந்த கேமராவால் ஒரு மின் படம் எடுத்தேன்.


அடுத்த படம் எடுக்க எத்தனிக்கும் போது அது காணாமல் போயிருந்தது. நண்பர் பாலசுப்ரமணியத்திடம் கேட்ட போது சொன்னார். சாட்சாத் அது குயிலே தான்.

அது குயிலே தான் என அவர் சொன்ன வார்த்தையே, குயிலின் குரலாய் என் காதில் தேன் பாய்ச்சியது. அப்புறமென்ன என் ஓராண்டு கால தவம் இனிதே நிறைவடைந்தது. இப்போது நினைத்தாலும் குயில் குதுகலம் தருகிறது.

நன்றிகள்: குயில் குறித்து நிறைய சொன்ன நண்பர் பாலசுப்ரமணித்திற்கும், விருந்து வைத்து குயில் பார்க்க வகை செய்த நண்பர் சங்கீதா சீனுவாசனுக்கும்.



மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

வெள்ளி, நவம்பர் 18, 2011

இந்தியா Vs அமெரிக்கா



மெரிக்காவில் பணியாற்றும் தம்பி ராதாகிருஷ்ணனுடன் தொலைபேசிக் கொண்டிருந்த போது, அதிகளவு இந்தியர்களை எதனால் அமெரிக்கா பணியமர்த்தி இருக்கிறது என நான் கேட்க, அதற்கு அவன் சொன்ன பதில்...

ராதா: ஒன்னே முக்கால மூனால பெருக்கினா எவ்வளவு சொல்லு?

நான்: அஞ்சே கால் டா. ஏன் கேக்கற?

ராதா: இங்க, ஒரு சூப்பர் மார்கெட்டுக்கு போனேன். ஏழு டாலருக்கு பொருள் வாங்கினேன். கேஷியர் கிட்ட பத்து டாலர் நோட்டை கொடுத்துட்டு மீதி காசுக்காக நின்னேன். அவன் மும்முரமா எதையோ தேடிக்கிட்டிருந்தான். கொஞ்ச நேரம் பொறுத்து பாத்தும் அவன் தேடறத நிறுத்தல. மீதி காசும் தரல. நான் கடுப்பாகி அவன் கிட்ட "மீதி காசு குடு"ன்னு கேட்டேன். இரு, கால்குலேடரை தேடிக்கிட்டிருக்கேன்னு சொன்னான். 

நான்: அடப்பாவி!

ராதா: எனக்கு சிரிப்பு வந்தது. நான் அவன் கிட்ட பத்து விரலை காட்டி, "இதில ஏழு விரலை மடக்கினா, மீதி மூணு வருதா" அப்படின்னு நர்சரி வாத்தியார் மாதிரி பாடம் நடத்தினேன்.

நான்: ஸ்கூல்ல, அவன் படிச்சானா? படுத்து தூங்கினானாடா?

ராதா: மீதியையும் கேளு. பாடம் கேட்டுட்டு, நம்பிக்கை இல்லாமலா என்னன்னு தெரியல, "அது உன் கையில" அப்படின்னுட்டு, கால்குலேட்டரை தேட ஆரம்பிச்சுட்டான்.

நான்: ஹா!ஹா! எல்லார் கையிலயும் பத்து விரல் தானேடா இருக்கும். அது கூட தெரியாத மடையனா அவன்.

ராதா: இப்போ தெரியுதா, அமெரிக்காவில ஏன் இந்தியர்களுக்கு மவுசுன்னு.

நான்: இது மாதிரி ஆளுங்க இருக்கற வரைக்கும், இந்தியா ஒளிரும் டா.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

திங்கள், நவம்பர் 14, 2011

மழலை உலகம் மகத்தானது..!


சமீபத்தில் என் சகோதரியின் வீட்டிற்கு என் அம்மாவும், நானும் போயிருந்தோம். அது விடுமுறை சமயம் என்பதால், தங்கள் குழந்தைகளை (தமிழ் குமரன் [3 ம் வகுப்பு], தணிகை குமரன் [UKG]) என் சகோதரியின் வீட்டில் விளையாட விட்டு விட்டு, அவர்களின் பெற்றோர் அலுவல் காரணமாக வெளியில் போயிருந்தனர். 

சகோதரியின் மகன் பிரணவ் சம வயது உடையவன் ஆகையால் அவர்கள் அவனோடு ஓடிப் பிடித்தும்,  கணினியிலும், பாட்டியிடம் (என் அம்மாவிடம்) கதை கேட்டும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

உணவருந்தும் நேரம் என்பதால் என் அம்மா அவர்களை சாப்பிட கூப்பிட, அவர்கள் விளையாட்டிலேயே ஆர்வமாக இருக்க, அம்மா சொன்னார்கள், "ஒரு தோசை சாப்பிட்டா ஒரு முந்திரி பருப்பு தருவேன்(வறுத்தது). எத்தனை தோசை சாப்படறீங்களோ, அத்தனை தருவேன்" என்று சொல்ல, குழந்தைகள் ஆர்வமாக சாப்பிட்டனர்.

சாப்பிட்டு முடித்ததும், அம்மா அவர்களுக்கு சொன்னபடியே முந்திரி பருப்பு கொடுக்க, தணிகை குமரன், அந்த நான்கு வயது குழந்தை சொன்னான், "பாட்டி, நான் ரெண்டு தோசை தான் சாப்பிட்டேன். எனக்கு நீங்க மூணு முந்திரி பருப்பு குடுத்திருக்கீங்க. இந்தாங்க." 

என் அம்மா: "பரவாயில்லை. சாப்பிடு"

தணிகை குமரன்: "இல்ல, இல்ல. எனக்கு ரெண்டு போதும்"



ஆம் நண்பர்களே. மழலைகள் உலகம் மகத்தானது. அவர்கள் எதிர்பார்ப்பது நம் அன்பையும், அரவணைப்பையும் தான். நாம் தான் வாழ்ந்தாக வேண்டிய நிர்பந்தத்தில் பணம் துரத்துகிறோம். தேவையான பணம் கிடைத்த பின்னரும், துரத்துவதை நிறுத்த நமக்கு தெரிவதில்லை. அத்தியாவசியத் தேவைகளுக்கு  அதிகமான எல்லாமே ஆடம்பரம் தான். 

நம்மில் எத்தனை பேர் ஒரு நாளில்  குறைந்தது ஒரு மணி நேரமாவது தங்கள் குழந்தைகளோடு (குழந்தைகளுக்காக அல்ல) செலவிடுகிறோம்? எத்தனை பேர், அவர்களின் கேள்விகளுக்கு நிதானமாக பதில் சொல்கிறோம்? அவர்களுக்கு இந்த உலகம் புதியது. அவர்களின் சந்தேகங்களை அவர்கள் நம்மிடம் தானே கேட்டு தெளிய முடியும். அவர்களுடன் பேசுவதில் நீங்கள் சுணக்கம் காட்டினால், யார் அவர்களிடம் ஆர்வமாக பழகுகிறார்களோ, அங்கே அவர்கள் ஈடுபாடு காட்ட ஆரம்பிப்பார்கள். இந்த சூழலில் இயல்பாகவே ஒரு இடைவெளி, நம்மோடு குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடுகிறது. இந்த இடைவெளி சரி செய்யப்படாவிட்டால், காலப் போக்கில் நம்மிடமிருந்து அவர்கள் விலகி செல்லவும் வாய்ப்புகள் அதிகம்.

புகை பிடித்தல், மது அருந்துதல், வீட்டை மறந்து நண்பர்களே கதி என கிடத்தல், பெண்கள் பின்னால் சுற்றுதல் என எல்லா தவறுகளுக்கும் காரணம், அன்பு குறைபாடு தான். வீட்டில் சரியாக அன்பு கிடைக்கும் போது அவர்கள் அதை வெளியில் தேட வேண்டிய அவசியம் இருக்காது. 

குழந்தைகள் நலனுக்காக என நாம் அவர்களுக்கு சொத்து சேர்ப்பதை விட, நல்ல குணத்தை, பழகும் தன்மையை, பொருள் ஈட்டும் கலையை அவர்களுக்கு கற்று தரலாம். பொருள் ஈட்டும் கலையை கற்பது எவ்வளவு அவசியமோ, அதை விட அவசியம், நல்ல மனிதனாக வாழப் பழக்குவது. அதை உங்களை தவிர வேறு யாரால் அவர்களுக்கு கற்று கொடுக்க முடியும்? உங்களை விட அவர்கள் மீது அக்கறை கொண்டவர்கள் வேறு யார் இருக்க முடியும்? 

அவனுக்காக நீங்கள் ஓடாதீர்கள். நீங்கள் ஓடி ஓயும் போது, அவன் உங்களிடமிருந்து ஓடியிருப்பான். எனவே அவனோடு ஓடுங்கள். ஓடி விளையாடுங்கள். நண்பனாக அவன் உங்களை கருதும் படி அவனோடு பழகுங்கள்.

"நானென்ன அவனோடு பேசாமலா இருக்கிறேன்?" என கேட்காதீர்கள். நீங்கள் உங்கள் குழந்தைகளோடு உங்கள் மொழியில் பேசாதீர்கள். அவர்கள் மொழியில் பேசுங்கள். நீங்கள் சரியானபடி பேசி இருந்தால் நீங்கள் எதிர்பார்க்கும் படி உங்கள் குழந்தை இருப்பான். அவன் அப்படி இல்லை என்றால் நீங்கள் அவனோடு சரியாக பேசவில்லை என்று தான் பொருள்.

எல்லாவற்றிற்கும் மேலாக முக்கியமான இரு விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள். ஒன்று, அவனுக்காக நீங்கள் எப்படியெல்லாம் கஷ்டப் படுகிறீர்கள் என்பதை அவனிடம் சொல்லாதீர்கள்.அவன் உணரும்படி, குறிப்பால் உணர்த்துங்கள். இரண்டு,அவன் உங்கள் குழந்தையாகவே இருந்தாலும், அவன் ஒரு உயிர். அவனுக்கென தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கும் என்பதை மறக்காதீர்கள். அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். 

எல்லோரும் இப்படி வாழ தொடங்கும் போது, உலகம் குற்றங்கள் அற்றதாக,  இனிமையானதாக மாறும்.


ஒரு கவிதை:

   றைவன் படைத்து 
   இயல்பு கெடாமல் 
   தொடரும் பட்டியலில் 
   இன்னமும் இருக்கிறது 
   குழந்தையின் சிரிப்பு.
                  (எங்கேயோ படித்தது)



குறிப்பு: நமது ஷைலஜா அக்கா ஒரு தொடர் பதிவை, தொடர சொல்லி இருந்தார்கள். இந்த இடுகை அதன் பேரில் எழுதப் பட்டது. என் மீது நம்பிக்கை வைத்து எழுத சொன்னதற்கு அவருக்கு நன்றிகள். இது தொடர் இடுகை என்பதால் நானும் நால்வரை அழைக்கிறேன்.


நால்வருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் இடுகையின் முடிவில் நீங்களும் நால்வரை அழைத்து தொடர சொல்லுங்கள். நல்லது நடக்கும். நம்புவோம்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

வெள்ளி, நவம்பர் 11, 2011

மூங்கில் காடுகளே...

நான் - காடு, மலை, நதி, அருவி, பரந்த சமவெளி, பள்ளத்தாக்கு என இயற்கை அன்னையின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் மனதை தொலைத்தவன். அத்தகைய இடங்களுக்கு அடிக்கடி பயணிப்பவன். சாலையில் செல்கையில் என் கவனம் கலைக்க மாறுபட்ட ஒரு மரமோ, சிறு குருவியோ போதுமானது. இயற்கையின் அக்கறை, கனிவு குறித்தும், மனிதனின் சிறுமை குறித்தும் சிந்திப்பவன். இயற்கையின் பெருமைகளை கூறும் இந்த பாடல் எனக்கு மந்திரம் போல.

சாமுராய் திரைப்படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஹரிஹரன் குரலில்  வைரமுத்துவின் வைர வரிகளில் நாம் மிகவும் ரசித்த பாடல்...



மூங்கில் காடுகளே...
வண்டு முனகும் பாடல்களே...
தூரச் சிகரங்களில்....
தண்ணீர் துவைக்கும் அருவிகளே...                                   (மூங்கில்)

இயற்கை தாயின் மடியை பிரிந்து,
எப்படி வாழ இதயம் தொலைந்து ?
சலித்து போனேன் மனிதனாய் இருந்து,
பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து

திரிந்து... பறந்து... பறந்து...

சேற்று தண்ணீரில் மலரும் சிவப்பு தாமரையில்,
சேறு மணப்பதில்லை, பூவின் ஜீவன் மணக்கிறது.
வேரை அறுத்தாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை,
அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்த பூச்சொரியும்.

தாமரை பூவாய் மாறேனோ
ஜென்ம சாபல்யங்கள் காணேனோ...
மரமாய் நானும் மாறேனோ
என் மனித பிறவியில் உய்யேனோ....

வெயிலோ முயலோ பருகும் வண்ணம்
வெள்ளை பனித்துளி ஆகேனோ                                        (மூங்கில்)

உப்பு கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்,
உப்பு தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது.
மலையில் விழுந்தாலும் சூரியன் மறித்து போவதில்லை,
நிலவுக்கு ஒளியூட்டி தன்னை நீடித்துக்கொள்கிறது.

மேகமாய் நானும் மாறேனோ,
அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ
சூரியன் போலவே மாறேனோ,
என் ஜோதியில் உலகை ஆளேனோ

ஜனனம் மரணம் அறியா வண்ணம்
நானும் மழைத்துளி ஆவேனோ...                                        (மூங்கில்)



மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...
Related Posts Plugin for WordPress, Blogger...