செவ்வாய், பிப்ரவரி 14, 2012

ஒரு விஞ்ஞானி உருவாகிறான்!!!



தன் காதலியின் இமைகள் வண்ணத்துபூச்சியை போல படபடத்ததில் தன் இதயத்தில் ஏற்பட்ட பூகம்பத்திலிருந்து கேயாஸ் தன் தேற்றத்தை (CHAOS THEORY) எழுதி இருக்கலாம்.

தன்னவளின் விழி ஈர்ப்பு விசையிலிருந்து நியுட்டன் புவி ஈர்ப்பு விசையை அறிந்திருக்கலாம்.

தான் தந்த ஒற்றை ரோஜா தன் காதலியின் காதோரம் அமர்ந்து தன் காதலை சொன்னதிலிருந்து தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதை ஜகதீஷ் சந்திர போஸ் உணர்ந்திருக்கலாம்.

தன்னவள் விரல் தொட்ட கணத்தில் தன்னுள் ஏற்பட்ட மின்னதிர்விலிருந்து மைக்கேல் பாரடே மின்சாரத்தை புரிந்திருக்கலாம்.

நானும் கூட காதலிக்கிறேன். நாளை நானும் விஞ்ஞானி ஆகலாம்!!!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

செவ்வாய், பிப்ரவரி 07, 2012

மரத்தைப் பிரசவிக்கும் பறவை



ரு மரத்தை
வெட்டும்போது
ஒரு பறவை
கதறும்.
எரிச்சல்கொள்ளத் தேவை இல்லை.


எங்கோ
ஒரு பழத்தை உண்டு
சிதைக்கவியலாத
அதன் விதையைச் சுமந்து
கழித்து...
பின்னது பயிராகி...
செடியாகி...
மரமாவதைப்
பார்த்து ரசித்திருந்தால்
நமக்கதன்
வேதனை புரியும்!


- நாவிஷ் செந்தில்குமார்

நன்றி: ஆனந்த விகடன் / 08 02 2012 இதழ்

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

செவ்வாய், ஜனவரி 31, 2012

நாணயம் - 2

ந்தியாவின் நாணயங்கள் குறித்த இந்த தொடர்பதிவின் போன இடுகையில், நாடெங்கும் கோவில் கட்டி கல்வெட்டுகளில் தமிழில் எழுதிய மாமன்னன் ராஜராஜன் தமிழில் நாணயம் வெளியிடாமல் தேவநாகரியில் வெளியிட்டதன் காரணம் புரியவில்லை என வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக தமிழில் வெளிவந்த நாணயங்களை தேடத் துவங்கியதன் விளைவு இந்த இடுகை. சங்க காலத்தில் வழக்கிலிருந்த "தமிழ் பிராமி" (நாம் தற்காலம் பயன்படுத்தும் தமிழின் முந்தைய வடிவம்) எழுத்துக்களை, எனக்கு அதன் மீது அறிமுகமோ பரிச்சயமோ இல்லாததால் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. நமக்கு நன்கு புரியும் தமிழை மட்டுமே தேடி தொகுத்திருக்கிறேன். இந்த தொகுப்பில் என் பார்வைக்கு வராத, நான் இன்னும் அறியாத தமிழ் நாணயங்களை நீங்கள் ஏதேனும் அறிந்து இருந்தால் அது குறித்து எனக்கு தெரியப்படுத்துங்கள்.



13 - 17 ஆம் நூற்றாண்டில் இலங்கையின் நல்லூர் பகுதியை ஆண்ட தமிழ் மன்னன் வெளியிட்ட காசு.


1469 - 1476 மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் சமர கோலாகலன் (போரிடுவதை விழா போல கொண்டாடுபவன்) வெளியிட்ட நாணயம்.


விஜய நகர பேரரசுக்கு கப்பம் கட்டி காஞ்சிபுரம் முதல் திருச்சிராப்பள்ளி வரையிலான பகுதிகளை 1487 - 1512 வரை ஆண்ட மன்னன் கோனேரிராயன் வெளியிட்ட நாணயம்.


கீழே இருப்பவை கிழக்கிந்திய கம்பெனியால் 1807 ஆம் ஆண்டு சென்னையில் அச்சடிக்கப் பட்ட நாணயங்கள்.

பத்து காசு 

இருபது காசு 

நாற்பது காசு 

இரண்டு பணம் 

கால் வராகன் 

அரை வராகன் 

இரண்டு வராகன் (தங்க காசு - எடை 6 கிராம்)


கீழே இருப்பது 1720களில் பிரெஞ்சு அரசால் புதுச்சேரியில் வெளியிடப்பட்ட நாணயங்கள்.

ஒரு துட்டு 

கோழிக்காசு 

இதெல்லாம் பழங்கால நாணயங்கள். தமிழ் நாணயங்கள் இன்றைக்கும் புழக்கத்தில் இருக்கின்றன. ஆனால் இங்கல்ல. இலங்கையிலும் சிங்கப்பூரிலும்.
இலங்கை நாணயங்கள்


சிங்கப்பூர் நாணயங்கள்


இதர நாணயங்கள்:


தமிழீழ மீட்பு நிதிக்கென விடுதலை புலிகளால் வெளியிடப்பட்ட தங்க காசு. (இது பொது புழக்கத்தில் விடப் படவில்லை)

இது அந்தமான் நிகோபார் யூனியன் பகுதியால் தன்னிச்சையாக பதிப்பிக்கப் பட்ட அதிகாரப்பூர்வமற்ற நாணயங்கள்.


குறிப்பு 1: 

போன இடுகையில் குறிப்பிடப்பட்டிருந்த புதுக்கோட்டை சமஸ்தானத்து "ஸ்ரீ விஜயா" நாணயம் அச்சடிக்கப்பட்டது லண்டனில். 

கீழே இருப்பது தொண்டைமான் அரசரின் தர்பார். 1858 இல் எடுக்கப்பட்ட புகைப்படம்.



குறிப்பு 2 :

மேலே இருக்கும் அத்தனை படங்களும் இணையத்திலிருந்து எடுக்கப் பட்டவை. 


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

வெள்ளி, ஜனவரி 27, 2012

பயணம் சுகமானது...


குழந்தையை சுமந்து 
நிற்க சிரமப்படும் 
அம்மாக்கள் இருக்கும் வரை 
பேருந்து பயணம் சுகமானது தான்.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

சனி, ஜனவரி 21, 2012

கண்டேன் குயிலை...

(இணையத்தில் எடுத்தது)

கடந்த நவம்பர் மாதம் வெளிவந்த குயில் தேடல் பதிவை படித்து விட்டு பலரும் நான் பார்த்தது குயில் அல்ல என குயில் குறித்த பல தகவல்களை அளித்திருந்தீர்கள். அதன் மூலம் குயில் படம் பார்க்க முடிந்தாலும், குயிலை பார்க்க முடியாத ஏக்கம் நெஞ்சுக்குள் கூடு கட்டி கூவிக் கொண்டே இருந்தது.

கடந்த டிசம்பர் மாத இறுதியில் அந்த குயில் தேடல் இடுகையை படித்து விட்டு வளர்மதி அக்கா தொலைபேசினார்கள். "குயிலை பாக்கணும்னா நம்ம வீட்டுக்கு வாங்க. தினமும் காலையில காக்கைக்கு வைக்கிற சாப்பாட குயிலும் வந்து சாப்பிடும். அதனால காலை வேளையில இங்க  வந்தீங்கன்னா நீங்க குயில் பாக்கலாம்" நம்பிக்கை தந்த இந்த வார்த்தைகளே என்னை இறக்கை இல்லாமல் பறக்க செய்தது. இங்கே அவர்கள் வீடு குறித்து அவசியம் சொல்ல வேண்டும். கிண்டியில் டிபென்ஸ் காலணியில் உள்ள அவர்கள் வீட்டின் பின்புறம் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவிற்கு மரங்களடர்ந்த பராமரிப்பில்லாத நிலம். பல வித பறவைகளும் சிறு விலங்குகளும் சர்வ சாதாரணமாக வளைய வரும் பிரதேசம். நரக சந்தடிகளுக்கு நடுவே ஒரு சொர்க்க பூமி. சென்னையில் அப்படி ஒரு வீடு ஏழு பிறவி புண்ணியம் செய்தவர்களுக்கு தான் வாய்க்கும்.

ஆனால் அரபிக் கடலோரம் பத்து நாள் நான் பயணம் போனதால் அவர்கள் வீட்டுக்கு செல்ல முடியாத நிலை. திரும்ப வந்ததும் பொங்கல் பண்டிகை களை கட்ட துவங்கி இருந்தது. பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியான மாட்டுப் பொங்கலை ஏதாவது கிராமத்தில் கொண்டாடலாம் என புதுக்கருவாட்சி என்ற கிராமத்திற்கு எனது இருசக்கர தேர் ஏறி சென்றேன். 

விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் கீழ்வாலை என்னும் இடத்திலிருந்து (கீழ்வாலையில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஓவியம் இன்றும் காணக் கிடைக்கிறது) வலப்புறம் நெடுந்தொலைவு உள் சென்றால் புதுக்கருவாட்சி வரும். போகும் வழி எங்கும் பசுமை, பாறை, குன்று என இயற்கை ஆட்சி செய்யும் இடம். மனிதர்கள் நடமாட்டம் அபூர்வமாக தென்படும் பகுதி. அந்த சாலையில்(!) சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே தன் கிளை நீட்டி மறித்தபடி நின்றிருந்தது ஒரு ரௌடி மரம். அந்த கிளையை குனிந்து கடக்கும் சாத்தியம் குறித்து யோசித்துக் கொண்டே கிளையை கவனித்த நான், சத்தமின்றி வண்டியை நிறுத்தினேன். கிட்டத்தட்ட கைக்கெட்டும் தூரத்தில் கிளை. கிளையில் நான் பல காலமாக தேடி வந்த குயில். இவ்வளவு அருகில் குயிலை பார்ப்பேன் என கனவிலும் நான் நினைக்கவில்லை. கருப்பாக இருந்தாலும் குயில் மிகவும் அழகாக மைனா அளவுக்கு இருந்தது. (சின்ன குயிலா?). பல படங்களில் பார்த்திருந்தாலும் இது குயிலில்லாமல் வேறு ஏதோ பறவையாக இருக்கவும் வாய்ப்பிருக்குமோ என்ற சந்தேகத்தில் அதன் குரல் கேட்க காத்திருந்தேன். நான் அசையவே இல்லை. அதுவும் தான்.

சிறிது நேர காத்திருப்பில், எனது தலைக்கவசத்தை நான் கழற்ற முனைந்த போது அது பறந்து அதே மரத்தின் வேறொரு கிளையில் அமர்ந்துக் கொண்டது. நான் இப்போது வசதியாக அமர்ந்து கொண்டு அதை கவனிக்கத் துவங்கினேன். சென்னை புத்தக கண்காட்சியில் பறவை பார்த்தல் என்றொரு புத்தகம் சுமைக்கு பயந்து வாங்காமல் வந்தது நினைவுக்கு வந்தது. சுமார் கால் மணி நேரம் கடந்தும் அது எந்தவிதமான சப்தமும் எழுப்பவில்லை. ஒருவேளை ஊமைக் குயிலாக இருக்குமோ என சந்தேகமும் வந்தது.

அதை கூவ செய்யும் விதமாக நான் அதைப் போலவே சீட்டி அடித்தேன். அது என்னை மதித்ததாகவே தெரியவில்லை. அசையாமல் எங்கேயோ அது பார்த்துக் கொண்டிருந்ததை பார்த்தல் யாருக்காகவோ அது காத்திருப்பதாக தோன்றியது. 

இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் பொறுமை இழந்து விடுவேன் எனும் சூழலில், அது பொறுமை இழந்தது. விருட்டென கிளம்பி பறக்க துவங்கியது. அதில் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் கூவிக் கொண்டே பறந்தது. மறுக்கவே வாய்ப்பில்லாமல் அது குயில் தான். 

அடடா... நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆளில்லா அந்த காட்டுப் பாதையில் எனது குதியாட்டத்தை எந்த மனிதனாவது பார்த்திருந்தால் என்னை மனநிலை சரியில்லாதவன் என மதிப்பிட்டிருப்பான். 


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

ஞாயிறு, ஜனவரி 15, 2012

தை திருநாள்...


தை முதல் நாளை பொங்கல் விழாவாக நாம் அனைவரும் மிக சிறப்பாக கொண்டாடி வருகிறோம். தீபாவளி என்பது நரகாசுரனை கிருஷ்ணர் அழித்ததை நினைவு கூறும் விதமாக, ஒரு தீயவன் அழிந்த மகிழ்ச்சியில் கொண்டாடுகிறோம். அதே போல பொங்கலை எந்த காரணத்திற்காக கொண்டாடுகிறோம் என கேட்டால், நமக்கு உணவு அளிக்கும் இயற்கையை பாராட்டும் விதமாக, நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடுகிறோம் என நாம் அனைவரும் சரியாக சொல்லி விடுவோம். ஆனால் வருடத்தின் 365 நாட்களில் எதனால் தை முதல் நாளில் இந்த விழா? விட்டத்தை வெறித்துக் கொண்டு யோசிக்கும் போது இப்படி ஒரு கேள்வி மனதில் எழுந்தது. விடை காணும் விதமாக விட்டத்தை விட்டு விலகி வேறு பக்கம் பார்த்து யோசிக்கத் தொடங்கினேன். அப்போது தான் ஒரு விஷயம் புலப் பட்டது.

நம்மை சுற்றி நான்கு திசைகள் இருந்தாலும், நாம் திசைகளை நான்கென பகுத்து வைத்திருந்தாலும், உண்மையில் பிரபஞ்சம் கோள வடிவிலானது(!). இதில் கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட வட்டப் பாதையில் நியதிக்குட்பட்டு இயங்குகின்றன. உண்மையில் பூமி சூரியனை சுற்றி வருகிறது. ஆனால் பூமியிலிருந்து கொண்டு சூரியனை கவனிக்கும் போது சூரியன் நகர்வதாக ஒரு காட்சிப் பிழை ஏற்படுகிறது. இதில் சூரியனானது பூமியின் முதல் பாகையிலிருந்து தொண்ணூறாவது பாகை வரை (1 Degree - 90 Degree) நகர்கிறது. அதன் பின் மீண்டும் தொண்ணூறாவது பாகையிலிருந்து முதல் பாகைக்கு நகர்கிறது. தொண்ணூற்று ஓராம் பாகைக்கோ முன்னூற்று அறுபதாம் பாகைக்கோ சூரியன் செல்லாது. ஒன்று முதல் தொண்ணூறு வரையிலான இந்த கோணத்தை தான் நாம் கிழக்கு என்கிறோம். அதே போல 91-180 தெற்கு (கடிகார சுற்றின் படி). 181-270 மேற்கு.  271-360 வடக்கு. அதனால் தான் நான்கு திசைகள். (ஒரு பேச்சுக்கு, சூரியன் அறுபது பாகைகள் மட்டுமே நர்வதாக கொண்டால் திசைகள் ஆறாகி இருக்கும்.)

இதை நாம் மிக எளிதாகவே உணர முடியும். இன்று காலை சூரிய உதயம், ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து, எங்கு நிகழ்கிறது என்பதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் - இரண்டு மாதங்கள் கழித்து சூரிய உதயம் எங்கு நிகழ்கிறது என்பதை கவனியுங்கள். நிச்சயம் சூரியன் கிழக்கிலேயே இடம் மாறி தான் உதிக்கும்.

சூரியன் வளர்வதோ தேய்வதோ இல்லை என்றாலும், ஒரு புரிதலுக்காக மட்டும் இதை நாம் சந்திரனின் வளர்த்தல் தேய்தலோடு ஒப்பிட்டுக் கொள்ளலாம்.

சூரியனின் ஒன்று முதல் தொண்ணூறாம் பாகை பயணம் - உத்தராயணம் - தை ஒன்றான இன்று தான் தொடங்குகிறது. அதனால் தான் இந்த நாளை விமரிசையாக உலகை வாழ வைக்கும் கதிரவனுக்கு நன்றி சொல்லும் நாளாக கொண்டாடுகிறோம்.

இன்று முதல் ஆனி மாத இறுதி வரையிலும் (ஆறு மாதங்கள்), தொண்ணூறு முதல் ஒன்றாம் பாகை வரையிலான திரும்பும் பயணம் - தட்சிணாயனம் - ஆடி முதல் மார்கழி இறுதி வரையிலும் நிகழ்கிறது.

முன் காலங்களில் (பசுமை புரட்சிக்கு முன்), இரண்டு போகம் மட்டுமே விதைப்பார்கள். ஒரு நெல் ஆறு மாதம் வளரும். ஆடிப் பட்டம் தேடி விதை, மற்றும் தை பிறந்தால் வழி பிறக்கும் (அறுவடை ஆகி பணம் கையில் இருக்கும்) போன்ற பழ மொழிகளின் வழி நாம் இதை உறுதி செய்யலாம். 

உத்தராயண துவக்கத்தில், தை மாதத்தில் பொங்கல் பண்டிகை மூலம் சூரியனுக்கும், மாடுகளுக்கும் நன்றி சொன்ன நாம், தட்சிணாயன துவக்கத்தில், ஆடிப் பெருக்கு பண்டிகை மூலம் நீருக்கும் பூமிக்கும் நன்றி சொல்லி இருக்கிறோம். 

ஆனால் இன்றோ, நதிகள் ஓடிய இடங்களில் மணல் லாரி ஓடுகிறது. இருக்கும் மணலும் கதற கதற கடத்தப் படுகிறது. தண்ணீரால் நிரம்பி இருக்க வேண்டிய ஆறு தண்ணீர் பொட்டலத்தால் நிரம்பி இருக்கிறது. வயலில் செருப்பு போட்டு நடக்க கூடாது எனும் மரியாதை உள்ள மனிதர்கள் பலரை நான் சந்தித்திருக்கிறேன். அப்படிப் பட்டவர்கள் பலர் அழுது கொண்டே விவசாயத்தை விட்டு வெளியேறுகிறார்கள். மண், கடவுளாக பார்க்கப் பட்ட காலம் போய் காசாக பார்க்கப் படுகிறது. 

இங்கே விவசாயம் இழிந்து போனாலும், ஏதோ ஏழை நாட்டிலிருந்து உணவு தருவிக்கப் படும். அரிசி கிலோ ஆயிரம் ரூபாய் என்றாலும் நாம் வாங்கி, "பொங்கலோ பொங்கல்" என கத்தி நம் "சடங்கை" முடித்து உண்டு விட்டு, தொலைகாட்சியில் அபிமான நட்சத்திரங்களோடு அளவளாவிக் கொண்டிருப்போம்.

எனக்கு சாமியாரின் பூனை நினைவுக்கு வருகிறது.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

வியாழன், ஜனவரி 12, 2012

சுவாமி விவேகானந்தர்


மெரிக்காவை வளர்ச்சிப் பாதையில் இட்டு சென்ற ஆரம்ப கால தொழிலதிபர்களில் மிக முக்கியமானவர் ராக்பெல்லர் (John D. Rockefeller). அமெரிக்காவின் மொத்த படிம எண்ணை (Fossil Fuel - Petrol, Diesel) வர்த்தகத்தில் பெரும் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர். பெரும் கோடீஸ்வரர்.  

அப்படிப்பட்ட மனிதர் மன உளைச்சலாலும், படபடப்பாலும், உறக்கமின்றி அவதிப் பட்டார். அவரிடம் அவரது நண்பர், தனக்கு தெரிந்த ஒரு சாமியார் இந்தியாவிலிருந்து வந்து இருப்பதாகவும் அவரிடம் போனால் ஏதாவது தீர்வு கிடைக்கலாம் என கூறி சுவாமி விவேகானந்தரிடம் ராக்பெல்லரை அழைத்து போனார்.

சுவாமி விவேகானந்தரிடம் ராக்பெல்லர் தனது பிரச்சினையை கூற, கேட்டுக் கொண்டவர், "உங்கள் பணத்தை ஏழை எளியவர்களுக்கு உதவுவதில் செலவிடுங்கள். உங்கள் பிரச்சினை சரியாகும்" என அறிவுரை கூறினார். அதை கேட்டு, இப்படி சொல்ல இவருக்கு என்ன உரிமை இருக்கிறது என கோபத்தோடு அங்கிருந்து வெளியேறினார் ராக்பெல்லர்.

ஆனால் விவேகானந்தரின் ஆளுமை மெல்ல மெல்ல அவரை சிந்தனையில் ஆழ்த்த, ராக்பெல்லர் தனது பணத்தை ஏழை எளியவர்களுக்காக செலவழித்தார். அவரே ஆச்சரியப்படும்படி தனது பிரச்சினையில் இருந்து அவர் மீண்டார்.

பின் விவேகானந்தரை சந்தித்த ராக்பெல்லர், ஏழை எளியவர்களுக்கு உதவுவதற்காக தனக்கு நன்றி சொல்லும் படி விவேகானந்தரை கேட்டுக் கொண்டார். புன்னகைத்த படி விவேகானந்தர் சொன்னார், "நன்றி சொல்ல வேண்டியது நானல்ல". உண்மையை உணர்ந்த ராக்பெல்லர் விவேகானந்தரிடம் நன்றி கூறினார்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே சுமார் 55 கோடி டாலர் அளவிற்கு நன்கொடை அளித்தார். கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் ராக்பெல்லர் பவுண்டேஷனின் பணி பிரமிக்க தக்கது. இன்றும் அது தனது பணியை சிறப்பாக தொடர்ந்து வருகிறது.

காலம் பல கோடீஸ்வரர்களை கடந்திருக்கிறது. ஆனால் ஒரு  கோடீஸ்வரரை கொடை வள்ளலாக சரித்திரத்தில் நிலைக்க செய்தவர் சுவாமி விவேகானந்தர். 

முனைவர் எஸ்.சந்திரா அவர்கள் எழுதிய "அறிஞர்கள் வாழ்வில்" என்ற புத்தகத்திலிருந்து - வெளியீடு : விகடன் பிரசுரம்.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

ஞாயிறு, ஜனவரி 01, 2012

பிரார்த்தனை...

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...
Related Posts Plugin for WordPress, Blogger...