மாற்றம் தேடி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாற்றம் தேடி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜனவரி 15, 2012

தை திருநாள்...


தை முதல் நாளை பொங்கல் விழாவாக நாம் அனைவரும் மிக சிறப்பாக கொண்டாடி வருகிறோம். தீபாவளி என்பது நரகாசுரனை கிருஷ்ணர் அழித்ததை நினைவு கூறும் விதமாக, ஒரு தீயவன் அழிந்த மகிழ்ச்சியில் கொண்டாடுகிறோம். அதே போல பொங்கலை எந்த காரணத்திற்காக கொண்டாடுகிறோம் என கேட்டால், நமக்கு உணவு அளிக்கும் இயற்கையை பாராட்டும் விதமாக, நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடுகிறோம் என நாம் அனைவரும் சரியாக சொல்லி விடுவோம். ஆனால் வருடத்தின் 365 நாட்களில் எதனால் தை முதல் நாளில் இந்த விழா? விட்டத்தை வெறித்துக் கொண்டு யோசிக்கும் போது இப்படி ஒரு கேள்வி மனதில் எழுந்தது. விடை காணும் விதமாக விட்டத்தை விட்டு விலகி வேறு பக்கம் பார்த்து யோசிக்கத் தொடங்கினேன். அப்போது தான் ஒரு விஷயம் புலப் பட்டது.

நம்மை சுற்றி நான்கு திசைகள் இருந்தாலும், நாம் திசைகளை நான்கென பகுத்து வைத்திருந்தாலும், உண்மையில் பிரபஞ்சம் கோள வடிவிலானது(!). இதில் கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட வட்டப் பாதையில் நியதிக்குட்பட்டு இயங்குகின்றன. உண்மையில் பூமி சூரியனை சுற்றி வருகிறது. ஆனால் பூமியிலிருந்து கொண்டு சூரியனை கவனிக்கும் போது சூரியன் நகர்வதாக ஒரு காட்சிப் பிழை ஏற்படுகிறது. இதில் சூரியனானது பூமியின் முதல் பாகையிலிருந்து தொண்ணூறாவது பாகை வரை (1 Degree - 90 Degree) நகர்கிறது. அதன் பின் மீண்டும் தொண்ணூறாவது பாகையிலிருந்து முதல் பாகைக்கு நகர்கிறது. தொண்ணூற்று ஓராம் பாகைக்கோ முன்னூற்று அறுபதாம் பாகைக்கோ சூரியன் செல்லாது. ஒன்று முதல் தொண்ணூறு வரையிலான இந்த கோணத்தை தான் நாம் கிழக்கு என்கிறோம். அதே போல 91-180 தெற்கு (கடிகார சுற்றின் படி). 181-270 மேற்கு.  271-360 வடக்கு. அதனால் தான் நான்கு திசைகள். (ஒரு பேச்சுக்கு, சூரியன் அறுபது பாகைகள் மட்டுமே நர்வதாக கொண்டால் திசைகள் ஆறாகி இருக்கும்.)

இதை நாம் மிக எளிதாகவே உணர முடியும். இன்று காலை சூரிய உதயம், ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து, எங்கு நிகழ்கிறது என்பதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் - இரண்டு மாதங்கள் கழித்து சூரிய உதயம் எங்கு நிகழ்கிறது என்பதை கவனியுங்கள். நிச்சயம் சூரியன் கிழக்கிலேயே இடம் மாறி தான் உதிக்கும்.

சூரியன் வளர்வதோ தேய்வதோ இல்லை என்றாலும், ஒரு புரிதலுக்காக மட்டும் இதை நாம் சந்திரனின் வளர்த்தல் தேய்தலோடு ஒப்பிட்டுக் கொள்ளலாம்.

சூரியனின் ஒன்று முதல் தொண்ணூறாம் பாகை பயணம் - உத்தராயணம் - தை ஒன்றான இன்று தான் தொடங்குகிறது. அதனால் தான் இந்த நாளை விமரிசையாக உலகை வாழ வைக்கும் கதிரவனுக்கு நன்றி சொல்லும் நாளாக கொண்டாடுகிறோம்.

இன்று முதல் ஆனி மாத இறுதி வரையிலும் (ஆறு மாதங்கள்), தொண்ணூறு முதல் ஒன்றாம் பாகை வரையிலான திரும்பும் பயணம் - தட்சிணாயனம் - ஆடி முதல் மார்கழி இறுதி வரையிலும் நிகழ்கிறது.

முன் காலங்களில் (பசுமை புரட்சிக்கு முன்), இரண்டு போகம் மட்டுமே விதைப்பார்கள். ஒரு நெல் ஆறு மாதம் வளரும். ஆடிப் பட்டம் தேடி விதை, மற்றும் தை பிறந்தால் வழி பிறக்கும் (அறுவடை ஆகி பணம் கையில் இருக்கும்) போன்ற பழ மொழிகளின் வழி நாம் இதை உறுதி செய்யலாம். 

உத்தராயண துவக்கத்தில், தை மாதத்தில் பொங்கல் பண்டிகை மூலம் சூரியனுக்கும், மாடுகளுக்கும் நன்றி சொன்ன நாம், தட்சிணாயன துவக்கத்தில், ஆடிப் பெருக்கு பண்டிகை மூலம் நீருக்கும் பூமிக்கும் நன்றி சொல்லி இருக்கிறோம். 

ஆனால் இன்றோ, நதிகள் ஓடிய இடங்களில் மணல் லாரி ஓடுகிறது. இருக்கும் மணலும் கதற கதற கடத்தப் படுகிறது. தண்ணீரால் நிரம்பி இருக்க வேண்டிய ஆறு தண்ணீர் பொட்டலத்தால் நிரம்பி இருக்கிறது. வயலில் செருப்பு போட்டு நடக்க கூடாது எனும் மரியாதை உள்ள மனிதர்கள் பலரை நான் சந்தித்திருக்கிறேன். அப்படிப் பட்டவர்கள் பலர் அழுது கொண்டே விவசாயத்தை விட்டு வெளியேறுகிறார்கள். மண், கடவுளாக பார்க்கப் பட்ட காலம் போய் காசாக பார்க்கப் படுகிறது. 

இங்கே விவசாயம் இழிந்து போனாலும், ஏதோ ஏழை நாட்டிலிருந்து உணவு தருவிக்கப் படும். அரிசி கிலோ ஆயிரம் ரூபாய் என்றாலும் நாம் வாங்கி, "பொங்கலோ பொங்கல்" என கத்தி நம் "சடங்கை" முடித்து உண்டு விட்டு, தொலைகாட்சியில் அபிமான நட்சத்திரங்களோடு அளவளாவிக் கொண்டிருப்போம்.

எனக்கு சாமியாரின் பூனை நினைவுக்கு வருகிறது.

மாற்றம் தேடி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாற்றம் தேடி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், டிசம்பர் 01, 2011

நல்ல நல்ல பிள்ளைகள்...



நண்பர் கோபிநாத் அவர்களின் அழைப்பின் பேரில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிக்கு இன்று சென்றிருந்தேன். LKG முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 120 குழந்தைகள் கலந்து கொண்டு கலக்கிய அந்த நிகழ்ச்சியிலிருந்து சில துளிகள்.

விருந்தினர்களின் வரவேற்புரை, தலைமையுரை, சிறப்புரை போன்ற பொதுவான சம்பிரதாயங்கள் முடிந்த பிறகு தொடங்கியது, குழந்தைகளின் குதுகலம். தனது பாதுகாப்புக்காக உடன் வந்திருந்த அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி போன்றோரின் கைகளை விடுவித்துக் கொண்டு உற்சாக வெள்ளத்தில் விளையாட தொடங்கினர் குழந்தைகள்.

வார்த்தை விளையாட்டு, பாட்டுக்கு பாட்டு, குழு நடனம் போன்ற குழு விளையாட்டுகளில் மட்டுமல்லாமல்; பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி, நடனப் போட்டி என அனைத்திலும் கலக்கினார்கள் குழந்தைகள்.

குழந்தைகளின் செய்கைகளுக்கு கை தட்டி, உற்சாகப் படுத்தி பாராட்டிக் கொண்டிருந்ததால் எளிதில் எங்களுடன் ஒட்டிக் கொண்டனர்.

"அம்மா இங்கே வா வா..." பாடிய மூன்று வயது சிந்து, "Twinkle, Twinkle little star..." பாடிய செல்வகுமார், காமராஜர் குறித்து பாடிய சரஸ்வதி, கொடி காத்த குமரன் பற்றி உணர்வுரை ஆற்றிய பிரான்சிஸ், அற்புதமாக நடனம் ஆடிய அர்ச்சனா, "Why this கொல வெறி..." பாடிய ஆல்பர்ட் கவனம் கவர்ந்தார்கள். பரிசும் பெற்றார்கள்.

"நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி 
இந்த நாடே இருக்குது தம்பி.
சின்னஞ்சிறு கைகளை நம்பி 
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி.

அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்,
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்...

என நிஷா பாடிக் கொண்டிருக்கும் போது, எனக்கு துக்கம் தொண்டையை அடைத்து கண்ணில் நீர் கட்டிக் கொண்டது. ஆம் நண்பர்களே, நிஷா உட்பட அங்கிருந்த குழந்தைகள் அத்தனை பேரும் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகள். யாரோ செய்த தவறுக்கு சிலுவை சுமப்பவர்கள். இதில் பலர் அன்னையும் தந்தையும் இல்லாதவர்கள். அரசாலும், தொண்டு நிறுவனங்களின் தயவாலும் உயிர் வாழ்பவர்கள். அவர்களுக்குள் இருக்கும் உற்சாகமும், சந்தோஷமும் எல்லா குழந்தைகளுக்கும் பொதுவானது. நிச்சயம் இந்த வியாதிக்கு மருந்து கண்டு பிடிக்கப்படும் என்ற ஆறாம் வகுப்பு படிக்கும் அர்ச்சனாவின் நம்பிக்கைக்கு முன் நான் மண்டியிட்டேன். 

இந்த இடுகை எய்ட்ஸ் குறித்த மக்களின் பொதுவான அருவருப்பான பார்வையிலிருந்து யாரோ ஒருவரின் பார்வையை மாற்றுமானால் நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்வேன்.

குறிப்பு: இன்று உலக எய்ட்ஸ் தினம்.

மாற்றம் தேடி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாற்றம் தேடி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், நவம்பர் 14, 2011

மழலை உலகம் மகத்தானது..!


சமீபத்தில் என் சகோதரியின் வீட்டிற்கு என் அம்மாவும், நானும் போயிருந்தோம். அது விடுமுறை சமயம் என்பதால், தங்கள் குழந்தைகளை (தமிழ் குமரன் [3 ம் வகுப்பு], தணிகை குமரன் [UKG]) என் சகோதரியின் வீட்டில் விளையாட விட்டு விட்டு, அவர்களின் பெற்றோர் அலுவல் காரணமாக வெளியில் போயிருந்தனர். 

சகோதரியின் மகன் பிரணவ் சம வயது உடையவன் ஆகையால் அவர்கள் அவனோடு ஓடிப் பிடித்தும்,  கணினியிலும், பாட்டியிடம் (என் அம்மாவிடம்) கதை கேட்டும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

உணவருந்தும் நேரம் என்பதால் என் அம்மா அவர்களை சாப்பிட கூப்பிட, அவர்கள் விளையாட்டிலேயே ஆர்வமாக இருக்க, அம்மா சொன்னார்கள், "ஒரு தோசை சாப்பிட்டா ஒரு முந்திரி பருப்பு தருவேன்(வறுத்தது). எத்தனை தோசை சாப்படறீங்களோ, அத்தனை தருவேன்" என்று சொல்ல, குழந்தைகள் ஆர்வமாக சாப்பிட்டனர்.

சாப்பிட்டு முடித்ததும், அம்மா அவர்களுக்கு சொன்னபடியே முந்திரி பருப்பு கொடுக்க, தணிகை குமரன், அந்த நான்கு வயது குழந்தை சொன்னான், "பாட்டி, நான் ரெண்டு தோசை தான் சாப்பிட்டேன். எனக்கு நீங்க மூணு முந்திரி பருப்பு குடுத்திருக்கீங்க. இந்தாங்க." 

என் அம்மா: "பரவாயில்லை. சாப்பிடு"

தணிகை குமரன்: "இல்ல, இல்ல. எனக்கு ரெண்டு போதும்"



ஆம் நண்பர்களே. மழலைகள் உலகம் மகத்தானது. அவர்கள் எதிர்பார்ப்பது நம் அன்பையும், அரவணைப்பையும் தான். நாம் தான் வாழ்ந்தாக வேண்டிய நிர்பந்தத்தில் பணம் துரத்துகிறோம். தேவையான பணம் கிடைத்த பின்னரும், துரத்துவதை நிறுத்த நமக்கு தெரிவதில்லை. அத்தியாவசியத் தேவைகளுக்கு  அதிகமான எல்லாமே ஆடம்பரம் தான். 

நம்மில் எத்தனை பேர் ஒரு நாளில்  குறைந்தது ஒரு மணி நேரமாவது தங்கள் குழந்தைகளோடு (குழந்தைகளுக்காக அல்ல) செலவிடுகிறோம்? எத்தனை பேர், அவர்களின் கேள்விகளுக்கு நிதானமாக பதில் சொல்கிறோம்? அவர்களுக்கு இந்த உலகம் புதியது. அவர்களின் சந்தேகங்களை அவர்கள் நம்மிடம் தானே கேட்டு தெளிய முடியும். அவர்களுடன் பேசுவதில் நீங்கள் சுணக்கம் காட்டினால், யார் அவர்களிடம் ஆர்வமாக பழகுகிறார்களோ, அங்கே அவர்கள் ஈடுபாடு காட்ட ஆரம்பிப்பார்கள். இந்த சூழலில் இயல்பாகவே ஒரு இடைவெளி, நம்மோடு குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடுகிறது. இந்த இடைவெளி சரி செய்யப்படாவிட்டால், காலப் போக்கில் நம்மிடமிருந்து அவர்கள் விலகி செல்லவும் வாய்ப்புகள் அதிகம்.

புகை பிடித்தல், மது அருந்துதல், வீட்டை மறந்து நண்பர்களே கதி என கிடத்தல், பெண்கள் பின்னால் சுற்றுதல் என எல்லா தவறுகளுக்கும் காரணம், அன்பு குறைபாடு தான். வீட்டில் சரியாக அன்பு கிடைக்கும் போது அவர்கள் அதை வெளியில் தேட வேண்டிய அவசியம் இருக்காது. 

குழந்தைகள் நலனுக்காக என நாம் அவர்களுக்கு சொத்து சேர்ப்பதை விட, நல்ல குணத்தை, பழகும் தன்மையை, பொருள் ஈட்டும் கலையை அவர்களுக்கு கற்று தரலாம். பொருள் ஈட்டும் கலையை கற்பது எவ்வளவு அவசியமோ, அதை விட அவசியம், நல்ல மனிதனாக வாழப் பழக்குவது. அதை உங்களை தவிர வேறு யாரால் அவர்களுக்கு கற்று கொடுக்க முடியும்? உங்களை விட அவர்கள் மீது அக்கறை கொண்டவர்கள் வேறு யார் இருக்க முடியும்? 

அவனுக்காக நீங்கள் ஓடாதீர்கள். நீங்கள் ஓடி ஓயும் போது, அவன் உங்களிடமிருந்து ஓடியிருப்பான். எனவே அவனோடு ஓடுங்கள். ஓடி விளையாடுங்கள். நண்பனாக அவன் உங்களை கருதும் படி அவனோடு பழகுங்கள்.

"நானென்ன அவனோடு பேசாமலா இருக்கிறேன்?" என கேட்காதீர்கள். நீங்கள் உங்கள் குழந்தைகளோடு உங்கள் மொழியில் பேசாதீர்கள். அவர்கள் மொழியில் பேசுங்கள். நீங்கள் சரியானபடி பேசி இருந்தால் நீங்கள் எதிர்பார்க்கும் படி உங்கள் குழந்தை இருப்பான். அவன் அப்படி இல்லை என்றால் நீங்கள் அவனோடு சரியாக பேசவில்லை என்று தான் பொருள்.

எல்லாவற்றிற்கும் மேலாக முக்கியமான இரு விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள். ஒன்று, அவனுக்காக நீங்கள் எப்படியெல்லாம் கஷ்டப் படுகிறீர்கள் என்பதை அவனிடம் சொல்லாதீர்கள்.அவன் உணரும்படி, குறிப்பால் உணர்த்துங்கள். இரண்டு,அவன் உங்கள் குழந்தையாகவே இருந்தாலும், அவன் ஒரு உயிர். அவனுக்கென தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கும் என்பதை மறக்காதீர்கள். அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். 

எல்லோரும் இப்படி வாழ தொடங்கும் போது, உலகம் குற்றங்கள் அற்றதாக,  இனிமையானதாக மாறும்.


ஒரு கவிதை:

   றைவன் படைத்து 
   இயல்பு கெடாமல் 
   தொடரும் பட்டியலில் 
   இன்னமும் இருக்கிறது 
   குழந்தையின் சிரிப்பு.
                  (எங்கேயோ படித்தது)



குறிப்பு: நமது ஷைலஜா அக்கா ஒரு தொடர் பதிவை, தொடர சொல்லி இருந்தார்கள். இந்த இடுகை அதன் பேரில் எழுதப் பட்டது. என் மீது நம்பிக்கை வைத்து எழுத சொன்னதற்கு அவருக்கு நன்றிகள். இது தொடர் இடுகை என்பதால் நானும் நால்வரை அழைக்கிறேன்.


நால்வருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் இடுகையின் முடிவில் நீங்களும் நால்வரை அழைத்து தொடர சொல்லுங்கள். நல்லது நடக்கும். நம்புவோம்.

மாற்றம் தேடி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாற்றம் தேடி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், அக்டோபர் 18, 2011

புத்தம்புது பூமி வேண்டும்.




மாற்றம் தேடி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாற்றம் தேடி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, செப்டம்பர் 24, 2011

கவசமா? தெவசமா?

மோசமான சாலை விபத்தால் மூளையில் நான்கு இடங்களில் இரத்தக்கட்டு ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரும் நண்பர் HDFC பாலா விரைவில் குணமடைய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன்...


                      மந்திரி: மன்னா! நீங்க போருக்கு போகும் போது 
                                    மறக்காம கவசம் போடுறீங்களே ஏன்? 

                      மன்னர்: கவசம் போடலன்னா எனக்கு தெவசம் 
                                     பண்ணிடுவாங்களே!

(தலை கவசம்... உயிர் கவசம்... ஹெல்மெட் அணியுங்கள்.)

(நண்பர் ஆ.பாலச்சந்திரன் அனுப்பிய குறுஞ்செய்தி)

மாற்றம் தேடி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாற்றம் தேடி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, செப்டம்பர் 16, 2011

காக்கும் இயற்கையை காப்போம்



ம்மா!

நமக்கு உணவளித்து
உறங்க இடம் தருபவள்.
நாம் அனுபவிக்கும் 
அத்தனை நலன்களுக்கும் 
அடிப்படை அவள்.

அவளுக்கு உடல் சுகவீனம் 
வரும்படி செய்தது அறிவீனம்.
அவளுக்கு உடல் தகிக்கிறது.
எனக்கு மனம் தவிக்கிறது.

வாகன பயன்பாட்டை 
வாய்ப்புள்ள போதெல்லாம் தவிர்த்தல்,
குளிரூட்டி, குளிர் பதனப் பெட்டி
பயன்படுத்தாமல் பொறுத்தல்,
மின் சாதன பயன்பாட்டை
முடிந்த வரை குறைத்தல்,
டீ கப், கேரி பேக்
பயன்பாட்டை வெறுத்தல்,
காய், கனிக்காகவாவது 
மரங்களை வளர்த்தல்
போன்றவை அவள்
சூட்டை தணிக்கும். நம்மை 
சுகப்பட வைக்கும்.

நன்றிகடனாக இல்லை என்றாலும்
எதிர்கால சந்ததியின் 
எதிர்காலம் கருதி 
காக்கும் இயற்கையை காப்போம்.

மாற்றம் தேடி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாற்றம் தேடி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூலை 19, 2011

பயிரை மேயும் வேலி!

சென்னை தி.நகர் வாணி மகாலில் "இந்திய குடிமக்களாகிய நாம்" என்ற அமைப்பின் சார்பில் நேற்று நடத்தப்பட்ட ஊழல் எதிர்ப்பு கூட்டத்திற்கு சென்றிருந்தேன். மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் திரு.N.விட்டல், ஆடிட்டர் திரு.குருமூர்த்தி, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை சார்ந்த திரு.செ.மா.அரசு, மேடைபேச்சாளர் திரு.சுகிசிவம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
திரு. விட்டல் அவர்கள் பேசுகையில், குற்றம் சாட்டப்பட்டாலே ஒருவர் தேர்தலில் நிற்பது தடை செய்யப்பட வேண்டும். இதன் மூலம் குற்றவாளிகளையும் ஊழல்வாதிகளையும் அரசியலிலிருந்து களைய முடியும். ஆனால் இதில் நிரபராதியான யாரோ ஒருவர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப் படும் பொய் வழக்கின் மூலம் பாதிக்கபடலாம் இல்லையா? இதை தவிர்க்க, இத்தகைய வழக்குகள் ஆறு மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். ஒரே ஒரு மேல் முறையீட்டுக்கு அனுமதி உண்டு. அதுவும் ஆறு மாத காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். ஆக ஒரு வழக்கு அதிகபட்சம் ஓராண்டுக்குள் முடிக்கப்பட்டால், பொய் வழக்கு பிரச்சினையை தவிர்க்கலாம்.
பணி இட மாற்றமும், தற்காலிக பணி நீக்கமும் ஆகிய இந்த இரண்டும் தான் அரசு ஊழியர்களை அச்சுறுத்துவதற்கு அரசியல்வாதிகள் பயன்படுத்தும் ஆயுதம். இது தவிர்க்கப்பட வேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு ஒருமுறை தான் பணியிட மாற்றம் என்பது விதியாக்கப்பட வேண்டும். மேலும் அதிகாரிகளின் மேல் ஊழல் புகார்கள் வரும்பட்சத்தில் உடனே தற்காலிக பணி நீக்கம் செய்யாமல் மத்திய கண்காணிப்பு ஆணையத்திடம் கேட்டுக் கொண்டால் (முக்கியமான சில உயர் பணிகளின் அதிகாரிகள் [அவர்கள் எண்ணிக்கையில் குறைந்த அளவு இருப்பார்கள்.] குறித்த விசாரணைகளுக்கு.) அந்த குற்றத்தின் உண்மை தன்மை குறித்து இரண்டே நாளில் ஆணையம் தகவல் அளிக்கும். இதன் மூலம் தேவையில்லாத தண்டனைகள் குறையும். அதிகாரிகள் மீதான அரசியல்வாதிகளின் ஆதிக்கம் குறையும். அதனால் நேர்மையான ஊழியர்கள் அச்சமில்லாமல் தங்கள் பணியை செய்ய முடியும். என பல உபயோகமான தகவல்களை கூறினார்.
 திரு.குருமூர்த்தி அவர்கள் கருப்பு பணம் எப்படி கடல் கடக்கிறது, அது ஏன் பொருளாதாரத்தில் ஒரு இன்றியமையாத விஷயமாகியது, அதை எப்படி ஒழிக்கலாம் என தெளிவாக பேசினார்.
அரங்கம் நிரம்பி நின்று கொண்டு பலர் கலந்து கொண்டது நேர்மையான சமூகம் சாத்தியம் என்ற நம்பிக்கை கொள்ள செய்தது. ஆனால் கலந்து கொண்ட பெரும்பாலோர் நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பது கொஞ்சம் வருத்தம் அளிக்கும் விஷயமாகும்.
திரு.சுகிசிவம் அவர்கள் மன்றங்களின் (சட்டமன்றம், நீதிமன்றம், மக்கள் மன்றம்) மாண்பு குறித்து பேசினார். அவர் எவ்வளவோ அற்புதமான விஷயங்கள் சொன்னார். அதில் ஆணி அடித்தர்போல மனதில் நின்றது....
"பட்டுகோட்டையார் ஒரு பாட்டு எழுதினர்.. திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது. அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது அப்படின்னு. அவர் காலத்தில அப்படி இருந்தது. ஆனா இப்போ, இது ரெண்டையும் ஒரே ஆள் தானே செய்யறான்."
வருத்தப்பட /  மாற்றப்பட வேண்டிய விஷயம்.
மாற்றம் தேடி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாற்றம் தேடி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூன் 05, 2011

உயிர் சங்கிலி...

''இந்த உலகம் மனிதனுடையது அல்ல. மனிதன் இயற்கையின் ஓர் அங்கமே. அதைச் சார்ந்துதான் மனிதன் வாழ முடியும். பூவுலகில் இந்த மகத்தான வாழ்வியல் வலையாகப் பின்னப்பட்டிருக்கிறது. இந்த வலையை மனிதன் பின்னவில்லை. மனிதன் இந்த வலையில் உள்ள சிறிய நூலிழை மட்டுமே. மனிதனின் பேராசைமிக்க செயல்கள், வெறும் புதைகுழிகள் நிறைந்த பாலைவனமாக பூமியை ஒரு நாள் மாற்றிவிடும். பூமித்தாய்க்கு என்னவெல்லாம் நிகழ்கின்றனவோ, அவையனைத்தும் அவனது குழந்தைகளுக்கும் நிகழுமல்லவா? இந்த வாழ்க்கை வலைக்கு எதிராக அவன் என்ன செய்தாலும், உண்மையில் அவற்றைத் தனக்குத்தானே செய்து கொள்கிறான்.'' 

-அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஃபிராங்க்ளின் பியர்ஸ், செவ்விந்திய சமுதாயத்தினரிடம் நிலங்களை ஒப்படைக்குமாறு 1854ம் ஆண்டு இட்ட உத்தரவுக்கு பதிலாக சியாட்டில் என்ற நகரில் வாழ்ந்த செவ்விந்திய தலைவர்களில் ஒருவர் தெரிவித்த கருத்து.




னித குல அறிவுக்கு எட்டிய வரையிலும் உயிர்கள் வாழ தகுதியான ஒரே கிரகம் நமது பூமி மட்டும் தான். இந்த பூமியில் மட்டும் தான் விலங்குகள், பறவைகள், நீர் வாழ் உயிரிகள் என சுமார் 17,50,000 வகைகளில்  உயிரினங்கள் வாழ்கின்றன. அதாவது அமீபா, கரப்பான்பூச்சி, மீன், தவளை, குருவி, குதிரை, மனிதன்... என 17,50,000 வகை உயிரினங்கள். - ஆசிரியர் ராமமூர்த்தி மாணவர்களிடம்  உரையாற்றிக் கொண்டிருந்தார்.

எங்க போய் தொலைஞ்சா இந்த கழுத? காலையிலேயே காணாம போயிட்டா..!  "ஏய்! அம்மா வந்தா கூழ எடுத்துகிட்டு மாந்தோப்புக்கு வர சொல்லு". தன் நான்கு வயது மகனிடம் சொல்லிவிட்டு, விடு விடுவென வேலைக்கு புறப்பட்டான் ஏழுமலை. 

கண்டாச்சிபுரம் அருகில் அரசின் வனத்துறை காட்டை ஒட்டி அமைந்துள்ள தனியார் நிலத்தில் 51 ஏக்கரை செட்டியார் வாங்கி செப்பனிட்டு மா, பலா, வேங்கை, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ் தேக்கு போன்ற பல வகை மரங்களையும் நட்டு பராமரிக்க, ஆரம்பத்திலிருந்தே அவரிடம் துடியாய் விசுவாசமாய் வேலை செய்ததால் செட்டியார் ஏழுமலைக்கு (இன்னும் சிலருக்கும்) நிலத்திலேயே நல்ல வீடு கட்டி கொடுத்திருந்தார்.

...இத்தனை வகை உயிரினங்கள் இருந்தாலும் தன் ஆறாம் அறிவால் இவை அனைத்திலும் மனிதனே சிறந்தவனாக இருக்கிறான். உலகம் மனிதனின் கட்டுப் பாட்டிலேயே இயங்குகிறது... 

"கூழுக்கு தொட்டுக்க தொவையல் செய்ய கீர பறிக்க போனேன். அதுக்குள்ள கிளம்பியாந்துட்ட! கொஞ்ச நேரம் இருந்தா என்னவாம்?" கேட்டுக் கொண்டே கூழை கணவனுக்கு கொடுத்தாள் வள்ளி. இங்க மரத்துக்கு தண்ணி பாச்ச வேண்டி இருந்துச்சு அதான் வந்துட்டேன். என அவளை சமாதானப் படுத்தினான் ஏழுமலை.

...உலகத்தின் உணவு உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கை மனிதனே அனுபவிக்கிறான். மீதி உள்ள ஒரு பங்கு உணவை மற்ற அனைத்து உயிரினங்களும் உண்ணுகின்றன. இதையும் அவை திருடி தின்பதாக கூறி அவற்றை மருந்து (!) அடித்து சாகடிக்கிறான் மனிதன்...

"ஒனக்கு ஒன்னு தரப் போறேன் வள்ளி" என அவளின் ஆவலை அதிகப் படுத்தினான் அவன். என்னாய்யா அது? விழிகள் விரிய கேட்டவளிடம், மரத்தடியில் கவிழ்த்து வைத்திருந்த கூடையை காட்டினான்.

...புலி, துருவக் கரடி, வேட்டை நாய், தேவாங்கு, புனுகு பூனை, காண்டாமிருகம், வௌவால், நட்சத்திர ஆமை, ஆந்தை, கழுகு என பல்வேறு உயிரினங்கள் அழியும் நிலையில் உள்ளன. ஒரு காலத்தில் இந்த பூமியெங்கும் காணப் பட்ட இந்த உயிர்கள் இப்போது சில நூறு மட்டுமே இருக்கின்றன...

ஆசையோடு கூடையை திறந்தவள் சந்தோஷத்தில் சிரித்தாள். "அட! புனுகு பூனை. எப்படி மாமா புடிச்ச? பகல் நேரத்துல வெளியவே வராதே?" ஆச்சரியத்தோடு கேட்டாள். 





"அது குட்டி. அதனால வழி தவறி வந்துடுச்சு போலருக்கு. மத்தியானத்துக்கு அடிச்சு குழம்பு வை". சொல்லி விட்டு வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

...உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் ஒரு சங்கிலித் தொடர் போல இணைந்துள்ளன. மனிதன் இதில் ஒரு கண்ணி மட்டுமே...

வேலையை முடித்து விட்டு மதிய உணவுக்காக வீட்டுக்கு போனவன் தட்டை வைத்துக் கொண்டு உட்கார்ந்தான். "பசிக்குது. சீக்கிரம் போடு" என்றான். "மாமா..." என்று தலையை சொரிந்த படி இழுத்தாள் வள்ளி. "என்னடி இழுக்கற?. பசிக்குது சோத்த போடு" என்றான். "இல்ல மாமா, சமைக்கும் போது நாய் கூட  விளையாடிகிட்டிருந்த நம்ம பய எம்மேல விழுந்து, உப்பு டப்பா குழம்பு சட்டில விழுந்துடுச்சு மாமா. குழம்ப வாயிலேயே வைக்க முடியல." சொல்லி விட்டு அப்பாவியாய் நின்றாள் வள்ளி. உழைத்த களைப்பும், பசியும், ஒரு சேர கோபமாய் அவளை பார்த்தவன், சோற்றில் தண்ணீர் ஊற்றி கரைத்து குடித்து விட்டு, "அதை அந்த நாய்க்கே போடு" என சொல்லி அகன்றான்.

...எந்த ஒரு உயிரினம் அழிந்தாலும் சங்கிலியின் ஒரு கண்ணி அறுபடும். மனித இனம் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமானால், மற்ற அனைத்து உயிரினங்களும் போற்றி பாதுகாக்கப் படவேண்டும்". ஆசிரியர் பேசிக்கொண்டிருந்தார்.
மாற்றம் தேடி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாற்றம் தேடி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மே 14, 2011

வேண்டுவன...

தமிழக தேர்தல் முடிவுகள் வந்த மறுநாள் காலை தென்காசியில் வைக்கப்பட்டிருந்த கவனிக்கும்படியான தட்டியின் மின்படம்.


மாற்றம் தேடி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாற்றம் தேடி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மே 06, 2011

கடைசி...



டைசி மரமும் வெட்டி உண்டு,
கடைசி நதியும் விஷம் ஏறி,
கடைசி மீனும் பிடிபட
அப்போது தான் உறைக்கும்...
பணத்தை சாப்பிட முடியாது என்று. 
                                                      - யாரோ 

நண்பர் மணி அனுப்பிய குறுஞ்செய்தி
மாற்றம் தேடி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாற்றம் தேடி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மார்ச் 24, 2011

சிகரெட்...


ரிந்து போன 
சிகரெட் சொன்னது...

இன்று உன்னால் நான்.
நாளை என்னால் நீ.


நண்பர் இராம்பாக்கம் அருள் அனுப்பிய குறுஞ்செய்தி
மாற்றம் தேடி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாற்றம் தேடி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மார்ச் 17, 2011

பிளாஸ்டிக் பயன் படுத்துங்கள்...


டீ கப்பில் சூடாக 
டீ குடியுங்கள்.

ஹோட்டலில், 
டிபன் வாங்கும் போது 
வாழை இலையை தவிர்த்து 
பிளாஸ்டிக் பேப்பரில் 
கட்டிக் கொள்ளுங்கள்.

சாம்பாரும், சட்னியும்
வேறு தனி கவர்களில்...

பூ, பழம், காய்கறி, மளிகை 
என எந்த பொருள் வாங்கும் போதும் 
கேரி பேகில் வாங்க மறக்காதீர்கள்.

அப்போது தான் உங்களுக்கு
புற்றுநோய் இலவசம்.

மாற்றம் தேடி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாற்றம் தேடி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மார்ச் 01, 2011

உயிரை பரிசளியுங்கள்!


மாற்றம் தேடி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாற்றம் தேடி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜனவரி 14, 2011

போகி...


காலை பல் துலக்கும் ப்ரஷிலிருந்து,
இரவு படுத்துறங்கும் பாய் வரை
அனைத்தும் பிளாஸ்டிக் ஆனதால்,
போகி நெருப்பில் எரிந்தது...
சுற்றி அமர்ந்த மனிதர்களின்
ஆரோக்கியம்
மாற்றம் தேடி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாற்றம் தேடி... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Related Posts Plugin for WordPress, Blogger...