3 Idiots திரைப் படத்தில் ஒரு காட்சி. ஒரு கல்லூரி. அதன் முதல்வர், வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்துகையில், ஒரு சமன்பாட்டை கரும் பலகையில் எழுதுவார். எப்படி என்றால், சூத்திரத்தின் ஆரம்பத்தை இடது கையாலும், சமன் குறிக்கு பிறகு வருவதை வலது கையாலும் ஒரே நேரத்தில் எழுதுவார். கவனிக்கும் படியான இந்த நிகழ்ச்சி, அவரது மேதமையை சொல்லுவதற்காக கொஞ்சம் மிகைப் படுத்தி சினிமாத் தனத்தோடு சொல்லப் பட்டதாகவே நான் நினைத்தேன். நிஜத்தில் இது சாத்தியம் என்பதாக நான் கேள்விப் பட்டது கூட இல்லை. கவனகம் நிகழ்ச்சி பார்த்திருக்கிறேன். (கவனகம் / அவதானம் - ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வது. தசாவதானி பத்து வேலைகள் செய்வார். சதாவதானி நூறு வேலைகள் செய்வார்) சிறப்பான முறையில் மனதை பயிற்சி செய்தால் கவனகம் சாத்தியம். ஆனால்.. (மீதி முடிவில்)
... உண்மையிலேயே தமிழை வளர்க்கும் சிலர் இருக்கிறார்கள். அவர்களில் என்னை கவர்ந்தவர், உபய வேதாந்த வேளுக்குடி வரதாச்சாரியார். இவரது புதல்வரான வேளுக்குடி கிருஷ்ணனும் தந்தைக்கு சளைக்காமல் உபன்யாசம் செய்கிறார். ஆண்டாளின் "மாலே மணிவண்ணா" என்ற பாசுரத்தில் வரும் "மாலே" என்ற ஒரு சொல்லுக்கு மட்டும், ஒன்றரை மணி நேரம் வியாக்கியானம் தருவார் வேளுக்குடி.
இவர் தனது முதல் நூலை எழுதிய பொது அவருக்கு வயது 18. அதன் பெயர், 'திவ்ய பிரபந்த வைபவம்'. சென்ற ஆண்டோடு இதை எழுதி நூறு ஆண்டுகள் முடிகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகிய நான்கு மொழிகளில் இந்த "அண்ணா" எழுதிய நூல்களின் எண்ணிக்கை 1207. (மிக அறிய பொக்கிஷமான இந்நூல்களை இப்போது நாம் எங்கே பார்க்க முடியும்?). ஒன்பது வயதிலேயே கம்ப ராமாயணத்தையும், திவ்ய பிரபந்தத்தையும் கரைத்து குடித்தவர் அண்ணா. இவருடைய இன்னொரு சிறப்பு, வலது கை, இடது கை என இரு கை களாலும் எழுதுவார். அதுவும் ஒரே நேரத்தில். வலது கையால் தமிழில் கிருஷ்ண வியாக்கியானம். இடது கையால் சமஸ்கிருதத்தில் ராம சரிதை.
ஒரு மனிதரால் இது சாத்தியமா என யோசித்துப் பாருங்கள். இது ஏதோ கட்டு கதை அல்ல. 25 ஆண்டுகளுக்கு முன்பு கூட நம்மோடு வாழ்ந்தவர். இரண்டு கைகளாலும் இரண்டு வெவ்வேறு பிரதிகளை எழுதக் கூடிய ஒருவர் இது வரை மனித சரிதத்தில் உண்டா? ஜாக்கிசானையும், மடோனாவையும் தெரிந்து வைத்திருக்கும் நமக்கு, நம் கண் முன் வாழ்ந்த இந்த மேதையை எப்படி தெரியாமல் போயிற்று?
ஒரு பத்திரிகை என்றால் அதில் எத்தனை பேர் வேலை செய்வார்கள்? ஆனால், அண்ணா நடத்திய பத்திரிகையில் அவரே ஆசிரியர், அவரே ப்ரூப் ரீடர், அவரே டெஸ்பாட்ச் கிளார்க், அவரே அதன் எல்லா பக்கங்களிலும் எழுதுபவர். 'பத்திரிகை' என்று தவறாக சொல்லி விட்டேன். தவறு. அவர் இப்படி தன்னந்தனியாக நான்கு பத்திரிக்கைகளை 32 ஆண்டுகளாக நடத்தினார். சமஸ்கிருதத்திலும் ஹிந்தியிலும் வைதீக மனோஹரா, தெலுங்கில் ராமானுஜ பத்திரிக்கா, தமிழில் ஸ்ரீ ராமானுஜன்.
தமிழர்களின் மறதி என்ற பொது வியாதியால் மறக்கடிக்கப் பட்ட இந்த 'அண்ணா'வின் முழுப் பெயர், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார்.
[இந்த அண்ணா காலமானது எப்போது என கூகிளில் தேடினேன். ஹாலிவுட் நடிகை எப்போது ஒன்பதாவது திருமணம் செய்து கொண்டார் என்ற விபரம் தேதியோடு கிடைக்கிறது. ஆனால், அண்ணா பற்றிய வாழ்கை குறிப்புகள் கிடைக்கவில்லை. இரண்டு நாட்கள் தேடி, பல்வேறு நண்பர்களிடம் விசாரித்து தெரிந்த விவரம், அண்ணா பிறந்தது 1891. காலமானது 1983.]
- சாரு நிவேதிதா / துக்ளக் 30.03.2011 இதழ்.
...ஒரு சரியான வார்த்தை கிடைக்காமல் திணறிய அனுபவம் பெரும் பாலும் எல்லா எழுத்தாளர்களுக்கும் இருக்கும் [ஒரே ஒரு விஷயம் எழுதும் போதே..]. அப்படி இருக்கும் போது இரண்டு கைகளாலும் இரு வேறு விஷயங்கள், இரண்டு மொழிகளில்...சாத்தியமே இல்லை. சாத்தியப் படுத்தி இருக்கிறார் என்றால் அவர் சாமானியர் இல்லை. அவருக்கு வணக்கங்கள்.
1 கருத்துகள்:
நான் என் வேலைகளை
செய்து கொள்வதற்கே
யாருடைய துணையையாவது
எதிர் பார்த்துக் கொண்டிருப்பேன்!
அடியே உன் வேலைகளை
செய்து கொடுப்பதற்கு
இத்தனை ஆர்வம்
எங்கிருந்துதான் வந்ததோ?
கருத்துரையிடுக